Sunday, October 10, 2010

நிகரில்லா அழகு

அம்மா இன்று பள்ளியிலே
ஆண்டு விழாவொன் றிருக்கிறது
சும்மா சாட்டுச் சொல்லாமல்
சுறுக்காய் வாநாம் போய்வருவோம்

அந்த விழாவில் தாய்மார்கள்
அனைவரும் வருவார் பள்ளிக்கு
இந்த முறையும் வாராமல்
என்னைத் தனியே அனுப்பாதே

இல்லை என்னைக் கேளாதே
இருக்கு எனக்கு வேலைபல
தொல்லை தராமல் நீசென்று
சகமாய்த் திரும்பி வாமகளே

பள்ளிக் குhடஞ் சென்றமகள்
பாதி விழாவில் திரம்பிவிட்டாள்
துள்ளிக் குதிக்க மறந்தவள்போல்
துயரம் பொங்க வந்துநின்றாள்

அன்னை உள்ளம் பதறிற்று
அணைத்துத் தலையை வருடிற்று
உன்னைத் துயரஞ் செய்தவர்யார்
உடனே சொல்லு என்றாளே


விழாவில் என்ன நடந்ததுசொல்
வீதியில் எதுவும் நடந்ததுவோ?
அழாதே கண்ணே என்றுசொல்லி
அணைத்து உச்சி முகர்ந்தாளே

என்னுடன் படிக்கும் பிள்ளைகளில்
எல்லோர் தாயும் வந்திருந்தார்
என்ன அழகு அவர்களெல்லாம்
ஏன்நீ இப்படி இருக்கின்றாய்

மல்லிகா வந்தாள் தாயோடு
மல்லிகை போலே முகமம்மா
அல்லியின் தாயின் அழகைநான்
அம்மா சொல்லி முடியாதே

சந்திராவின் தாய் முகம்பார்த்தேன்
சந்திரன் போலே அழகம்மா
இந்திராவின் தாய் அம்மம்மா
இப்படி அழகைப் பார்த்ததில்லை

ஓவ்வொரு தாயின் முகமுந்தான்
ஓவ்வொரு விதத்தில் ஜொலிக்கிறது
அவ்வுரு வெல்லாம் உனக்கில்லை
அழகே இல்லை உன்முகத்தில்

 கறுப்புத் தழும்பாய் உன்முகத்தில்
கரடு முரடாய் இருப்பதென்ன
வெறுப்பாய் இருக்கு பார்ப்பதற்கு
வேதனை தருது  சொல்லுவதற்கு

மகளின் வார்த்தை கேட்டஅன்னை
மனம் கலங்கிப் போயிற்று
முகமே நனைய அழுதுவிட்டு
முத்தம் தொடுத்து கதைசொன்னாள்

ஆறு மாதக் குழந்தயாய்நீ
அழகாய் தொட்டிலில் உறங்கையிலே
வேறு வீட்டில் தண்ணியள்ள
விரைந்தேன் ஒருநாள்;, அந்நாளில்

அயலில் உள்ள வீட்டினிலே
அடுப்படி தன்னில் தீபிடித்துப்
புயலாய்ப் பரந்தெம் வீட்டிநுள்ளும்
புகுந்து அத்தீ எரித்ததம்மா
துண்ணீர் அள்ளி வரும்போது
துகதக என்றே தீப்பிடித்து
விண்ணை  முட்டும் புகைகண்டேன்
வீட்டுள் ஓட நான்முயன்றேன்
எரியும் நெருப்பில் நான்செல்ல
என்னை யாரும் விடுவாரோ
கருகிப் போக உன்னைவிட்டுக்;
கண்ணே நானும் இருப்பேனோ
கட்டிப் பிடித்த கைகளைநான்
கழற்றி வீட்டுள் பாய்ந்து விட்டேன்
தொட்டில் தன்னில்  நீகிடந்தாய்
தூக்கி கொண்டே ஓடிவந்தேன்
உன்னை அணைத்த பகுதியன்றி
உடலில் மற்றைப் பகுதியெல்லாம்
என்னை நெருப்பு எதித்ததடி
என்று சொல்லி அழுதாளே

தாயின் கதையைக் கேட்டவுடன்
ததும்பிய கண்ணிர் வழிந்தோட
வாயால் எதுவும் சொல்வதற்கு
வார்த்தை யின்றித் துடிதுடித்து

அன்னையை இறுகக் கட்டியவள்
அன்பு முகத்தில் முத்தமிட்டாள்
உன்னைப் போல அழகிந்த
உலகில் இல்லை இல்லையென்று

தாயைக் கட்டி முத்தமிட்டாள்
தாமரைக் கையால் வழிந்தோடும்
நீரைத் துடைத்து முகம்பாத்தாள்
நிகரில்லா அழகு உனக்கென்றாள்

Saturday, September 4, 2010

கொக்குக் குஞ்சுகள்

பம்பைமடு ஓர் அழகிய கிராமம். வவுனியா மாவட்டத்தில் வவுனியாவின் மேற்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியில் ஐந்து மைல் தூரம் சென்று பம்பைமடுச் சந்தியை அடையலாம். சந்தியிலிருந்து வடக்கு நோக்கி இரண்டு மைல் தூரம் காட்டுக்குள் சென்றால் அந்த அழகிய கிராமத்தைக் காணலாம்.
இது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முந்திய நடைமுறை. இப்பொழுது சந்தியில் பெரிய ராணுவமுகாம் இருப்பதால் அதை தாண்டிப் புதுப் பாதை வழியே செல்லவேண்டியிருப்பதால் இன்னும் ஒரு மைல் தூரம் அதிகம். நகரை நோக்கிய நகர்வை விரும்பும் மக்களுக்கு ஒரு மைல் பின்னடைவு. வாழ்க்கையில் நீண்ட காலம் பின்னடைவு. இது தான் வளர்ச்சி. பம்பைமடுவில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. ஐம்பது குடும்பங்கள் வரைதான் அக்கிராமத்தில் வாழ்ந்தனர். இப்போதும் சில குடும்பங்கள் வாழ்கின்றன. வாழ்கின்றனவா? இல்லை..இல்லை..இருக்கின்றன. குளம் பெரிய நீர்ப்பாசனத்திட்டத்தில் உள்ளது. குளம் நிறைய தண்ணீர் இருக்கும் போது பார்க்கவேண்டுமே! அழகு என்றால் அது தான் அழகு. குளக்கட்டில் நின்று இரவு நேரத்தில் கிழக்கே பார்த்தால் வவுனியா நகரின் மின்சார வெளிச்சம் தெரியும். கிழக்குப் பார்த்த குளம். பொதுவாகவே வவுனியாவில் உள்ள பெருங்குளங்களெல்லாம் எல்லாம் கிழக்குப் பார்த்தவைதான். குளக்கட்டிலிருந்து குறுக்காக நேரே வவுனியாவிற்குச் செல்வதாயின் நான்கு மைல்கள்தான் இருக்கும். ஆனால் செல்ல முடியாதே. குளம் நிரம்பியிருக்கும் போது காலையிலே குளக்கட்டில் நின்று பார்த்தால் சின்னஞ்சிறு அலைகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்கின்ற காட்சியைக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். குளம் நிரம்பியதும் தாமரைகள், ஒலுக்கள், கொட்டி, ஆம்பல் எனப் பலவகைப் பூக்களால் குளம் நிறையும். “பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்” என்று புலமைப்பித்தன் இந்தக் குளத்தைப் பார்த்துத்தான் எழுதினானோ. குளத்தில் விரால், வாளை, ஜப்பான், பொட்டியன், கணையன், கெளிறு, கொக்கச்சான், மண்விரால், குறவை, அயிரை, மாங்கன், ஒட்டி, விலாங்கு, உழுவை எனப் பலவகை மீனினங்கள் உண்டு. குளம் வற்றி வறண்டு போவது மிகக் குறைவு. முன்பெல்லாம் வவுனியா நகரிற்கு உத்தியோகம் பார்க்க வரும் பிற பிரதேச நண்பர்களை எங்கள் ஊரிற்கு அழைத்துச் சென்று குளத்தின் அழகையும் வயல் வெளிகளையும் காடுகளையும் காட்டுவோம். காட்டுப் பழவகைகளை உண்ணக் கொடுப்போம். எனது பிறந்த ஊர்தான் இந்தப் பப்பைமடு. கடுங் கோடைக் காலத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை எப்போதாவது குளம் வற்றிப் போகும். குளம் வற்றிப் போனால் அலைகரை வெட்டையாகிவிடும். நீர் ஏந்தும் பகுதியை மரநிழல்களுக்கூடாகச் சுற்றி வருவதே பெருஞ் சுகமான மகிழ்ச்சிதான். மருத மரகங்கள், அடம்பு மரங்கள் பொருந்திய வெட்டையாக அலைகரை இருக்கும். விளாத்தி மரங்கள் பழங்களைக் கொட்டும். பொறுக்கி மகிழ்வோம்.
முள்ளுப் பற்றைகள் கிடையாது. வெறுங்காலோடு சுற்றி வருவோம். யாரிடம் செருப்பு இருந்தது அணிவதற்கு. மழை மேகம் வானத்தில் கூடிவிட்டால் குளத்து அலைகரையில் நூற்றூக் கணக்கான மயில்களைக் காணலாம். மயில்களின் நடனத்தைக் காணாத கண்ணென்ன கண்ணே. மாலை வேளையில் மழைமேகத்தைக் கண்டு மகிழ்ந்து சிலிர்த்துத் தம் தோகைகளை விரித்து மயில்கள் சுழன்று சுழன்று ஆட, மயில்களின் தோகைகளிலே, கரு முகிலை ஊடறுத்துவரும் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்க, அந்த அற்புதத்தை எப்படி வர்ணிப்பது. குளம் நிரம்பியிருக்கும் போது காலையிலே குளிக்கச்செல்வோம். காலையிலே மட்டுமென்ன, காலை மதியம் மாலை வசதிப்பட்டால் மூன்று நேரமும் குளத்தில் முழுகுவதுதானே எமது வேலை. நீச்சலில் உடல் வியர்க்கக் குளத்தை விட்டு வெளியேறுவோம். தட்டைக் கல்லை எடுத்து தண்ணீரிலே படும்படி சரித்து எறிந்து அக்கல் தத்தித்தத்திப் போவதைப் பார்த்து, மகிழ்வதும் அதையே போட்டியாக்கி எறிவதும் இனிக் கிடைக்காத மகிழ்ச்சியே. ஊரில் பணக்காரர் என்று யாரும் இல்லை. பிச்சைக்காரர் என்றும் யாரும் இல்லை. வீட்டுக்கு வீடு பசுமாடுகளாலும் பிள்ளைகளாலும் நிறைந்தே இருக்கும். ஒரு வேளைச் சாப்பாடு சாப்பிடாத குடும்பம் என்று எந்தக் குடும்பத்தையும் சொல்ல முடியாது. மீனும், இறைச்சியும், பாலும், தேனும், நெய்யும், மரக்கறிகளும் அரிசியோடு சகலதும் கிடைக்கும். விலைக்கு அல்ல. ஊரில் கடையே இல்லை. கீரை வகைகள், பிரண்டத் தண்டு, வட்டுக்காய் போன்றவைகள் வீதியோரத்துச் செல்வங்கள். பன்றி இறைச்சிக் கருக்கல், மான், மரை இறைச்சி வத்தல்கள், குளத்து விரால் ஜப்பான் மீன்கருவாடு, பாலைப் பாணி, இலுப்பைப் பூப் பாணி, உலுவிந்தப் பழப் பாணி, சாத்துப் பூசணிக்காய், நீத்துப் பூசணிக்காய், தீன் பிலாக்காய், கெக்கரிக்காய், வெள்ளரிப்பழம், வத்தகப் பழம் என சேமித்து வைத்து வாழ்ந்த எம் மக்களுக்குப் பஞ்சம் எப்படி வரும். அரிசிக்குப் பஞ்சம் இல்லை. தேங்காய், மிளகாய், மரக்கறி வகைகள் வீட்டிலேயே கிடைக்கும். கோழி வளர்க்காத குடும்பங்களே இல்லை. சீனி, உப்பு, மண்ணெண்ணெய், சவர்க்காரம் முதலான சில பொருட்கள் தான் வாங்க வேண்டிய பொருட்கள். கிராமத்து வாழ்க்கையின் சுகத்தை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். எங்கள் குளம் நிரம்பி கலிங்கு(வான்) பாய்ந்து கொண்டிருந்த நேரம் அது. அயிரை வாருபவர்களும், மீன் அடிப்பவர்களும், தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்களும் என ஆண் பெண் இரு பாலாராலும் குளத்தின் பல பாகங்களும் நிரம்பியிருந்த நேரம் அது.

ஊரிலே ஒரு பிரமுகர். நாற்பது வயதைத் தாண்டியவர். அவரை ஊர்த் தலைவர் என்று சொல்ல முடியாது. அவர் வவுனியாவிற்கு வெளியிலே சென்று படித்தவர். கொஞ்சம் விசய ஞானம் உள்ளவர். இளைஞர்களோடும், சிறுவர்களோடும் கிளித்தட்டு, கோப்பைப்பந்து, வொலிபோல், முதற்கொண்டு கிட்டிப்புள், வார்ப்பாய்தல், கடுதாசி விளையாட்டு வரை சேர்ந்து விளையாடுவார். குடும்பஸ்தர். எட்டுப் பிள்ளைகளைப் பெற்றவர். வயது முதிர்ந்தவர்களோடும் அவர்களுக்கு ஏற்ற வகையிலே பழகுவார். அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. எனது நெருங்கிய உறவுக்காரர். மத்தியான நேரம் குளத்துக்குக் குளிக்க வந்தார். தனது பக்கத்து ஊர் உறவினர் ஒருவரையும் தனது ஒத்த வயது நண்பர் ஒருவரையும் அழைத்து வந்தார். வந்தவர்கள் இருவரும் கொஞ்சம் ஊரடிபட்டவர்கள். சிறுவர்கள் குளத்திலே நீச்சலடித்துக் கொண்டிருந்தனர். பெண்களும் ஆண்களும் சேர்ந்து குளிக்க முடியாது. வேறு வேறு இடங்களில்தான் குளிக்க வேண்டும். குளக்கட்டிலே ஏறும்போது, பெண்கள் குளித்துக் கொண்டிருந்தால் ஆண்கள் புறக்கட்டினூடாகச் சென்று கொஞ்சம் தள்ளித்தான் குளக்கட்டில் ஏறுவார்கள். பெண்கள் குளிப்பதை யாரும் பார்க்க மாட்டார்கள். குளக்கட்டால் நடந்து செல்வதே நாகரிகமற்ற செயல் எனக் கருதிய காலம் அது.

குளத்து அடம்பு மரங்களில் ஏராளமான கொக்குக் கூடுகள். ஒரே இரைச்சல். அலைகரையில் தான் கொக்குகள் அடம்பு மரங்களில் கூடுகளைக் கட்டியிருந்தன. கொக்குக் குஞ்சுகளின் இறைச்சி மிகவும் சுவையானது. யாரும் சிலர் எப்போதாவது கொக்குக் குஞ்சுகளைக் கூட்டுக்குள்ளேயிருந்து பிடித்து வந்து சாப்பிட்டிருப்பார்கள். பெருமளவில் ஊரார் அந்தப் பாவச் செயலை விரும்புவதில்லை. மரங்களிலே கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாத்து, குஞ்சுகள் பொரித்துப் பறக்கும் வரையில் உணவூட்டித் தாய்க் கொக்குகள் நடாத்துகின்ற குடும்ப வாழ்க்கை அற்புதமானது. சிறகுகள் முளைக்காத பிஞ்சுக் குஞ்சுகளை, எதிர்த்துப் போராட வல்லமை இல்லாத கொக்குகளிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டு வந்து பொரித்துக், கறிவைத்துச் சாப்பிடுவது என்பது மிகமிகக் கொடுமையான பாவச் செயல்தானே. இப்பொழுது கூட, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அந்தச் சம்பவத்தை நினைக்க என்மனம் பதறுகிறது. குளக்கட்டில் நின்று அலைகரையிலே தெரிந்த கொக்குக் கூடுகளையும் இரைச்சலையும் பார்த்த பக்கத்து ஊர் உறவினர் “கொக்குக் குஞ்சு இறைச்சியைப் போல ருசியான இறைச்சியைக் காணேலாது.உந்த அடம்பு மரங்களில இருக்கிற கூடுகளில இருக்கிற குஞ்சுகளப் பிடிச்சு வந்தா இறைச்சி அந்த மாதிரி இருக்கும். நல்லா உறைப்புப் போட்டுப் பொத்த மிளகாயும் வெட்டிப் போட்டு கண்ணில கண்ணீர் வாற மாதிரி உறைப்போட கொக்குக் குஞ்சு இறைச்சியச் சாப்பிட்டுப் பாத்தாத்தான் தெரியும் இறைச்சியின்ர அருமை.எலும்பும் இருக்காது.எல்லாம் கடிச்சுத் தின்னலாம்.” ஊர்ப் பிரமுகருக்கும் ஆசை வந்து விட்டது. குளத்தில் நிறை தண்ணீர். எப்படி மரங்களிருக்கும் அலைகரைக்குச் செல்வது. “அது சரி என்னண்டு காணும் அடம்பு மரத்தடிக்குப் போறது. நிறை தண்ணியில்லே. நீந்திப் போறதெண்டாச் சும்மாவே. கொஞ்சத் தூரமே. ஏலுமே ஆராலயும்.” ஏன் காணும் நீந்துவான். கட்டுமரம் கட்டினாப் போகிலாந் தானே.” “என்னண்டு கட்டுறது..” இலவ மரத்தப் பிளந்து அதில கமுகஞ் சிலாகையள வரிஞ்சு கட்டி, வலிச்சுக் கொண்டு போகிலாம். இதென்ன பெரிய கஸ்ரமே..” ”அது சரி..அங்க மரத்தில இருந்து கொக்குக் குஞ்சுகள் தவறி விழுந்தா முதலயள் கிடக்கும் பார்த்துக் கொண்டு, கௌவிறதுக்கு. அதுக்குள்ள போய் முதலயளுக்க அம்பிட்டிட்டா…” “என்ன பெரிய முதல. முதல என்ன கொக்குக் குஞ்சுக்காகவே கிடக்குது. ஆக்கள் போற அசுமாத்துக் கேட்டா ஓடிப் போகுது…” ”சீ…சீ.. அப்பிடிச் சொல்லேலாது. முதல கடிச்சாத் தப்பேலாது. அதுக்கொரு வழி பண்ணவேணும்.” ”உந்தக் குளக்கட்டுக்குக் கீழே உள்ள வயிரவருக்கு நேத்தி வைச்சா முதல கடிக்காது. வயிரவரவிட முதல என்ன பெரிசே.” “ஓம்..ஓம்..அது தான் சரி.” குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களை அழைத்துத் திட்டத்தைச் சொல்லி ஆசை காட்டினார் அந்தப் பிரமுகர். அவர் சொல்வதை வேத வாக்காகக் கருதிச் செயற்படும் சிலர் அங்கே இருந்தார்கள். பாவம் புண்ணியம் பார்க்கும் பருவமல்ல அவர்களது பருவம். கொக்குக் குஞ்சு இறைச்சியை ருசிக்க வேண்டும் என்பதும் விளையாட்டுக் குணமுமே அவர்களிடம் இருந்தன. அவர்களது பயம் முதலை பற்றி மட்டுமே தான். நீந்தத் தெரிந்தவர்கள்.அதனால் தண்ணீர் என்ற பயமும் இல்லை. கட்டு மரத்தைக் கட்டினார்கள். நாலுபேர் இரண்டு சாக்குகளோடு கட்டு மரத்தில் ஏறியிருந்து வலிக்கத் தொடங்கினார்கள். அதைக் கேள்விப்பட்ட ஊர்ப் பெரியவர்கள் சிலர் தடுத்துப் பார்த்தார்கள். ”டேய்..பாவமிடா..குஞ்சுகளையும்ஆரும் கொல்லுவாங்களோடா..அதுவும் கூட்டுக்க கிடக்கிற சிறகு முளைக்காத குஞ்சுகள..பாவமடா.பறந்து தப்ப வழி தெரியாத குஞ்சுகளக் கொல்லுறதோ. நாங்களும் குழந்த குட்டியளோட வாழுற நாங்கள். வீணா ஊர்ப் பழியத் தேடாதேங்கடா..” எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். பிரமுகரோ விடுவதாயில்லை.அவரோடு நின்றவர்கள் உசார்க் கொடுத்து நின்றார்கள். பாவம் அப்பாவி இளைஞர்கள் நால்வர்.ஏதும் அறியாத ஒரு உணர்ச்சியில் விளையாட்டாகக் கட்டுமரத்தை வலித்துக் கொண்டு அலைகரையை அடைந்தார்கள். ஊர்ப் பிரமுகர் ஒரு தேங்காயைக் கொண்டு வந்து குளத்திலே கழுவி கும்பிட்டுவிட்டு வைரவருக்கு நேர்த்தி வைத்து விட்டுக் குளக்கட்டில் தன் சகாக்களோடு நின்று மகிழ்ச்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஊரெல்லாம் குளக்கட்டில் கூடிவிட்டது. அலைகரையிலிருந்த அடம்ப மரங்களில் கூடுகட்டி இருந்த கொக்குகளெல்லாம் தம் குஞ்சுகளைக் காப்பாற்ற முடியாமல் பதகளித்துப் பறந்து இரைந்து அலறிச் சத்தமிட்டன. மரங்களுக்கு மேலே வெள்ளைக் கொக்குகளின் அவல ஓலம். கட்டு மரத்திலிருந்த இருவர் மரங்களிலே மளமளவென ஏறி கூடுகளுக்குள்ளே இருந்த குஞ்சுகளைப் பிடித்துக் கீழே எறிய, சாக்குக்குள்ளே குஞ்சுகளை ஏந்தத் தொடங்கினார்கள் இருவர். சில குஞ்சுகள் பறக்க முயன்று தவறி வீழ்ந்து தண்ணீரில் தத்தளித்தன. அவற்றையும் எட்டி எட்டி வாரிப் பிடித்துக் கழுத்தைத் திருகியும், சிறகுகளை ஒடித்தும் சாக்குக்குள் போட்டனர். இரண்டு சாக்குகளும் நிறையும் வரையில் பல மரங்களிலும் ஏறி இறங்கி கொக்குக் குஞ்சுகளை வேட்டையாடின அந்த வெறி நாய்கள். சிறகு முளைக்காத குஞ்சுகளையும், கொஞ்சம் சிறகு முளைத்துப் பறக்க முயன்ற குஞ்சுகளையும் வேறாக்கியிருக்கலாம் என்று தங்களுக்குள்ளே கதைத்துக் கொண்டு சாக்குகளை இறுக்கிக் கட்டினார்கள். “அட படு பாவியளே மனிசன் செய்யிற வேலயாடா இது…” என்று திட்டித் தீர்த்துவிட்டுச் செய்வதறியாத ஊர்ப் பெரியவர்கள் திரும்பிவிட்டார்கள். சின்னஞ் சிறுசுகளைக் கையைப் பிடித்து இழுத்தாலும் அச்சிறுசுகள் கைகளை உதறிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்தன. கட்டுமரம் திரும்பிக் கொண்டிருந்தது. நடுக்குளத்துக்கு வந்து விட்டார்கள். கட்டு மரத்திலே வந்து கொண்டிருந்த இரண்டு முரட்டு இளைஞர்கள் தண்ணீரில் குதித்து நீந்திக் கரைக்கு வந்திட்டார்கள். மற்றைய இருவரும் மெள்ள மெள்ளக் கட்டு மரத்தை வலித்துக் கொண்டு கரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். “டேய்! முதலயால தப்பிச்சாச்சு. இனி என்னத்துக்கிடா வைரவருக்கு நேத்தி..” ஒருவன் ஓடிப் போய் மரத்தின் கீழே வைரவருக்கு நேர்த்திக் கடனுக்காக வைத்திருந்த தேங்காயை எடுத்து அடித்து உடைத்தான். குஞ்சு குருமன்கள் எல்லாம் ஓடிப் போய்ப் பொறுக்கித் தேங்காய்ச் சொட்டுக்களைத் தின்னத் தொடங்கிவிட்டன. நடுக் குளத்தைத் தாண்டியது கட்டுமரம். இன்னும் சிறிது தூரம். குளக்கட்டிலிருந்து ஒரு ஐம்பது அடி தான் இருக்கும். கட்டு மரத்திலே இருந்த இன்னொருவன் குதித்து நீந்திக் கரைக்கு வந்தான். கட்டு மரத்திலிருந்தவன் சத்தம் போட்டான். “அண்ண! சாக்கு மூட்டையளக் காணேல்ல அண்ண..!’ ‘டேய்! வடிவாப் பாரிடா..” ”இல்லையண்ண. கட்டு மரத்தில நான் மட்டுந்தான்..

Friday, September 3, 2010

சுஜாதா மகேந்திரராஜா

சதுரங்கக் குதிரை சதிராட்டமாட
மந்திரிமாரோ மானோட்டமோட
யானைகள் நன்கு யதார்த்தமாய் அசைய
ராணிதான் அங்கே ராஜாவை ஆள
ராஜாவோ அதிலே ராச்சியமாள
சிப்பாய்கள் சூழ சிங்காரம் செய்ய
சதுரங்கப்பலகை சங்கீதம் பாடும்
சந்தர்ப்பம் சில கணம் சங்காரம் ஆகும்
அருகினில் கடிகாரம் அமைதியைக் கொல்லும்
வெற்றிகள் தோல்விகள் போட்டியின் ஜாலம்

சதுரங்கப் போட்டி

ஐரோப்பா கூட்டி அழகாகக் காட்டி அடைந்தார்கள் வெற்றி அரங்கத்தைப் ப+ட்டி எமது இனம் ஏற்றி எதிலுமவர் ஈட்டி நாகரீகப் போட்டி நல்ல நாட்காட்டி கருத்தில் நினைவோட்டி காய்கவனமாட்டி அறிவுக்கறிவூட்டி அகிலத்திற்கும் காட்டி பார்க்கப் படம் மாட்டி பரிவுடனே பேட்டி சிங்கமுடன் சிவாஜி சிறப்புடனே வாழி இருவீர மறவர் கருமத்தில் ஒருவர் சரியான குரவர் சதரங்கப் பிரியர் மரியாதைக் குரியர் அதி வேக மனிதர் அவர் யாருமல்ல சிவாஜி சிங்கம் என்பர்

சதுரங்கம்

அரசனொடு அரசி இரு மந்திரிகள் குழுமி துவி குதிரை அணியும் படையானை இரண்டும் வீரர் குழாம் எட்டும் மொத்தம் பதின் ஆறு மோதும் படை எதிரே சம பலத்தின் புதிரே! மரணமெதிர் வரினும் தம் மன்னனுக்காக மானமோடு போர் தொடுக்கும் தமிழ் மறவனாக மதியுள்ள மன்னவனும் பெரு வெற்றி காண மரிக்கின்ற சேனையுடன் சதுரங்கமாக …